ஒபாமா வெற்றி: கருத்துப்படங்கள்

ஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

  • ஒபாமாவின் வெற்றி மற்ற அமெரிக்க அதிபர் போட்டிகளோடு ஒப்பிட்டால் எவ்வாறு வேறுபடுகிறது?
  • தேர்வர்கள் பேரவையில் எவ்வளவு வித்தியாசம்?
  • வாக்கு எண்ணிக்கையில் எத்தனை விகிதம் மாற்றம் அடைந்துள்ளது?
  • 92 க்ளின்டன், 84 ரேகன், 60 கென்னடி, 00 புஷ்ஷோடு ஒப்பிட்டால் – எத்தகைய வெற்றி

நன்றி: A Blowout? No, but a Clear-Cut Win, for a Change – NYTimes.com

margin-of-victory-popular-vote-obama-reagan-bush-gore

அடுத்தாத்து ஆல்பர்ட் – மூக்கு சுந்தர்

* ஒபாமாவுக்கு கருத்துக்கணிப்பில் இருக்கும் இதே அளவு செல்வாக்கு வேறு ஒரு வெள்ளை இனத்து ஜனநாயகக்கட்சி அதிபர் வேட்பாளருக்கு இருந்திருந்தால் தேர்தல் முடிந்தது என்று பலகாலம் முன்னரே முடிவுகட்டி இருப்பார்ர்கள். மெக்கெய்ன் ஆதரவாளர்கள் இன்னமும் துள்ளிக் கொண்டு இருப்பதற்கும், நம்பிக்கை இழக்காமல் பேசிக்கொண்டிருப்பதற்கும் ஒபாமவின் இன அடையாளமே காரணம்.

* இந்தத் தேர்தலில் கட்சி சார்புள்ளவர்களை விட கட்சி சார்பற்றவர்களே முடிவை தீர்மானிக்கும் காரணிகளாகிறார்கள். அடுத்ததாக இளைய தலைமுறையினர் மற்றும் – முதன் முறை ஓட்டளிப்பவர்கள்

* 2000 ம் வருடத் தேர்தலில் மெகெயின் குடியரசுக் கட்சி வேட்பாளாராக முன்மொழியப்பட்டிருந்தால் எதிர்த்த எந்த ஜனநாயகக்கட்சி வேட்பாளரையும் கபளீகரம் செய்திருக்கும் அளவிற்கு தனிப்பட்ட செல்வாக்கு உடையவர்.

தவறான நேரத்தில் முன்மொழியப்பட்டிருக்கும் சரியான நபர் அவர். பாவம்.. !!

* ஒபாமா லேசுப்பட்ட ஆள் அல்ல. அட்டகாசமான EQ உள்ள பக்கா அரசியல்வாதி. அவருடைய நிர்வாகத்திறமை என்ன என்பதை காலம்தான் சொல்லும். தெரியாத பிசாசே மேல் என்று எடுக்கப்படும் முடிவே அவர் பெறப்போகும் அதிபர் பதவி.

* காலகாலமாக போரில் அசகாயம் புரிந்தவர்களை அரியணை ஏற்றும் நாடு அமெரிக்கா. பனிப்போருக்கு முந்தைய அமெரிக்க அரசின் ராணுவ நடவடிக்கைகளுடன் எச்சரிக்கை கலந்த செயல்பாடுகளும் இருந்தன. காரணம் சோவியத் அரசு. ஆனால் பனிப்போருக்கு பிந்தைய, ருஷ்யா சிதறுண்ட பிறகான காலகட்டத்திற்கு பிறகு, ராணுவ நடவடிக்கைகள் கேட்பார் இல்லை என்ற காரணத்தால் மிகுந்த அராஜகமான முறையில் மேற்கொள்ளப்பட்டன. இந் நிலையில் அமெரிக்க அதிபர், போரில் முனைப்பில்லாத/ விருப்பமில்லாத பேச்சு வார்த்தையில் அதிக நம்பிக்கை உள்ள ஒரு Diplomat ஆக இருப்பது அவசியமாகிறது.இந்த வட்டத்துக்குள் அட்டகாசமாக பொருந்தும் முகம் ஒபாமாவுக்கு

* எட்டுவருட புஷ் அரசின் தோல்வி அடைந்த பிடிவாத முகத்தை உலக அரங்கில் மாற்ற, மழுப்பலும் பசப்பலும் மிக்க அரசியல் முகம் தேவைப்படுகிறது. இதே முகம் உள்நாட்டு குழப்பங்களையும் சீர்செய்தால் வரலாறு படைக்கும் – கருப்பினத்தின் முதல் அதிபர் என்ற வரலாற்று மாற்றத்தோடு மெற்சொன்னதும் சேரும். ஆனால் ஒபாமாவினால் கருப்பர்களது இனரீதியிலான எண்ணங்களில் ஏற்படும் திருப்தி அளவுக்கு, அவர்களுக்கு ஆதரவான அவரது செயல்பாடுகளினால் வராது. கூடியவரை தன்னைப் பொதுவான அதிபராக காட்டிக் கொள்ள முயல்வதே நல்லது என்கிற இன்றைய அவரது என்ணம் பின்னும் தொடரும்

* சமயங்களில் சர்ச் பிரசங்கம் போல அமைந்துவிடும் ஒபாமாவின் உரை, மெகெயின் உடனான வாதப் பிரதிவாதங்களில் அடக்கமாக, கொஞ்சம் அலுப்பாகக் கூட இருந்தது. தான் ஒன்றும் பேசாமல் இருந்தாலே போதும், சர்ச்சைகளை தவிர்க்கலாம். உணர்ச்சிவசப்படுகிற , அங்க சேஷ்டைகளில் முகம் சுளிக்க வைக்கிற பெரியவர் பார்ப்பவர்களின் அதிருப்தியை சம்பாதிக்கும் வேலையை தானே பார்த்துக் கொள்வார் என்று அவர் நினைத்து இருக்கலாம். மொத்தத்தில் மூன்று டிபேட்டிலும் மெகெயின் தொற்றார். ஒபாமா அவரை ஜெயிக்கவில்லை.

* ஒபாமாவின் இனம், மதம், அவர் தொடர்புகள், அவருடைய அனுபவம், சம்பத்தப்பட்ட மெகெயின் கேள்விகள் எல்லாமே நெகடிவ் ஆயுதங்கள் என்று மீடியாவால் நிராகரிக்கப்பட்டதற்கு காலமே காரணம்.

மீடியாவின் செல்லப்பிள்ளைகளை மக்கள் நிராகரித்ததாக சரித்திரமே இல்லை- இத்துடன் அபரிமிதமான தேர்தல் நிதியும் சேர்ந்து விட ஒபாமாவின் தேர்தல் விளம்பர முயற்சிகள் வரலாறு காணாத வெற்றி – சம்யங்களில் திமுகவை ஞாபகப்படுத்துகிற தொண்டர் கட்டுமானம்.

* உள்ளூரில் திமுக/ அதிமுக போன்ற ப்ழுத்த பழங்களின் அமைப்புக்கு எதிராக விஜயகாந்துக்கு சாமரம் வீசும் நண்பர்கள் நியாயமாக சித்தாந்த ரீதியாக அதே எண்ண ஓட்டத்தின்படி புதியமுகமான பாரக்கிற்கு ஆதரவு அளித்திருக்க வேண்டும். என்னே அதிசயம். அவர்கள் ஆதரவு மெகெயினுக்குத்தான்.

விஜயகாந்துக்கு ஆதரவு அளிப்பது மு.க.வை எதிர்க்கவே என்பதும், . மெகெயினுக்கு ஆதரவு அளிப்பது லிபரலான ஒபாமாவை எதிர்க்கவே என்பதும் இந்த வலதுசாரி சிந்தனையாளர்களின் உலகளாவிய பார்வையாக இருக்கக்கூடும்.

* அதிகாரம் கைக்கு வந்தபிறகுதான் நிஜ ஒபாமா வெளிவருவார். அப்படி வராமல் போவது நம் அதிர்ஷ்டம் அல்லது என்னைப் பொன்றவர்களின் அபரிமிதமான எச்சரிக்கைக்கு தேவை இல்லாத உண்மையான நல்ல மனிதர் ஒபாமா.

* நவம்பர் நாலுக்காக உலகம் காத்திருக்கிறது. அமெரிக்கா ஒபாமாவுக்கு மகுடம் சூடினால் அது “வெள்ளை இனத்தவர்கள் இன அழுக்குகள் இல்லாது காலத்திற்கு தேவைப்பட்ட முடிவை எடுத்தார்கள்” என்பதற்காக உலகமே மனந்திறந்து அமெரிக்கர்களை தலையில் துக்கி வைத்து வைத்துக் கொண்டாடும் நாளாகி விடும்

பார்ப்போம்…!!!

மூக்கு சுந்தர்

அமெரிக்க தேர்தல்: வெளியுறவுக் கொள்கை

ராஜேஷ் சந்திரா:

1. இராக்: ஒபாமா வந்தாலும் உடனடியாக வாபஸ் ஆரம்பித்துவிடுமா? அங்கு நிலை எப்படி இருக்கிறது? குர்துக்கள் தனி நாடாக்கிக் கொள்வார்களா? மெகயின் அதிபரானால் ஒபாமாவின் நிலையில் இருந்து எவ்வாறு சூழல் மாறுபடும்? ஆருடம் ப்ளீஸ்!

1a) ஒபமா வந்தால் : வாபஸ் ஆரம்பிக்காது. பிரச்சாரத்தில் இதுவரை ஒபாமா தெளிவாகத் தன் நிலையை விளக்கவில்லை. விரைவில் வெளியேறுவோம் என முழங்கி தென் மாகாணங்களை அவர் இழக்கத் தயாராக இல்லை (முக்கியமாக இராணுவத் தலைமையை).

1983-ல் லெபனானை விட்டு வெளியெறுவதற்கு ஒரு குண்டு வெடிப்பு போதுமானதாக இருந்தது. இராக்கில் அது இயலாது. காரணம்: எண்ணை வளம். அருகாமையில் இரான். அமெரிக்கப் ப்டைகள் வெளியேறினால் நிச்சயம் அந்தப் பிராந்தியம் 1800-களுக்குச் செல்லும் வாய்ப்புகள் நிறைய. பிரிட்டன் இரண்டாம் உலகப் போருக்குப் பின் செய்தத் தவறை அமெரிக்கா செய்யாது. இப்பொதைக்கு அமெரிக்கா அங்கே ஆப்பசைத்தக் குரங்கு.

ஒபாமா என்ன செய்ய வேண்டும்: செனட்டில் இருப்பது வேறு, ஜனாதிபதியாக இருப்பது வேறு என்று ஒபாமாவிற்கு முதல் நாளே தெரிந்து விடும் (இதுவரை தெரியாமல் இருந்தால்). எனவே வறட்டு ‘ராம்போ’ வசனங்களை எல்லாம் மூட்டைக் கட்டி வைத்து விட்டு இராக்கிய மித வாதிகளைக் கண்டறிய வேண்டும். அவர்களை இராக் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்.

இராக் நாடு மதப்பிரிவுகளில் மிகுந்த அக்கறை காட்டும் நாடு. இதனால் அனைத்துப் பிரிவினரயும் உள்ளடக்கிய ஒரு குழு பதவியில் இல்லாமல் மக்களை அணுக வேண்டும். தேவைப்பட்டால், முக்தாதா அல் சதர் போன்ற உக்கிரமான மதத் தலைவர்களையும் அந்தக் குழுவில் இடம் பெறச் செய்யவேண்டும். வரும் வன்முறைகளுக்கு அந்த மதத் தலைவர்கள் பொறுப்பு என சுட்ட வேண்டும். இதையும் மீறி அந்த மதத் தலைவர்களின் ஆட்கள் வன்முறையில் இறங்கினால் மக்களே புறக்கணிப்பார்கள். இவை அனைத்தும் பின்புலத்தில் நடக்க வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் சதாமிற்கு ஒரு மாற்றுதானே தவிர மக்கள் இன்னும் அதை ‘வரதராஜ பெருமாள்’ அரசாகத்தான் பார்க்கிறார்கள்.

அமெரிக்க அரசாங்கம் (அரசியல் செயல்களில்) முண்ணனியில் இருப்பதாகக் காண்பித்துக் கொண்டால் பிரிவினை/தீவிர வாதிகள் நிச்சயம் விரும்பமாட்டார்கள். இதன் பின் அமெரிக்கத் துருப்புகள் விலகல் ஆரம்பித்தால் நல்லது. நிச்சயம் இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகும்.

1b) அங்குள்ள நிலை: சதாம் இருந்த வரை செய்திகள் கசிந்தன. இப்போதைய அரசில் (?!) வெளி வருகின்றன. மற்றபடி ஆட்சி முறை அப்ப்டியே தான் இருக்கிறது. ஷியா, சுன்னி பிரிவினரிடயே ‘அமெரிக்கா எப்போ ஒதுங்குவான், நம்ம அடித்துக்கொண்டு சாகலாம்’ என்று காத்திருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் ‘இதெல்லாம் இருக்கட்டும், வடக்கே குர்துக்களின் தலையை எப்படி எடுக்கலாம்’ என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றபடி, பணத்துக்கு விலை போதல், இரு குழுக்களிடையே மோதல் உண்டாக்கி குளிர் காய்தல், வருங்காலத்தைப் பற்றி யோசிக்காமல் முட்டாள்களாகவே இருத்தல் என்ற typical அராபிய ஆட்சி முறை ஜோராக நடக்கிறது.

1c) குர்துக்கள் தனிநாடு பெறுவது இராக்கை விட துருக்கியின் கைகளில் தான் இருக்கிறது. துருக்கி இராணுவம் பலமானது (மற்ற அரபு நாடுகளோடு ஒப்பிடும் போது). இவர்களை மீறி வடக்கே இராக்கில் மட்டும் குர்துக்கள் தனி நாடு பெற முடியாது. துருக்கி நேட்டோவில் இருப்பதால் மேற்கத்திய வல்லரசுகள் சும்மா முனகிவிட்டு பேசாமல் போய்விடும்.

காஷ்மீரைப் போன்றது இந்தப் பிரச்சினை.

1d) மெக்கெய்ன் அதிபரானால்: ஆரம்பத்தில் மெக்கய்னிடம் இருந்த நம்பிக்கை போகப் போக நீர்த்து விட்டது. இராக் பிரச்சினக்கு, இவர் ஆட்சிக்கு வருவதும், டிக் செய்னி வருவதும் ஒன்றுதான். இயல்பாகவே மெக்கெய்ன் இராணுவ வீரர். இவரால் விட்டுக் கொடுத்து தொலை நோக்குப் பார்வையோடு இராக் மிதவாதத் தலைவர்களை அணுக முடியாது,

2. Africom: ஆப்பிரிக்காவில் மூக்கை நுழைப்பது ஜெர்மனி/ஜப்பானில் இருக்கும் நிரந்தர அமெரிக்க படை போல் சாதுவாக சமாதானமாக அமையுமா? அல்லது சவூதியில் புகுந்த அமீனாவாக இன்னும் சில குவைத்களையும் இராக்குகளையும் குட்டி போட்டு குழப்பத்திற்கு இட்டு செல்லுமா?

மத்தியக் கிழக்கு நாடுகளில் பட்ட சூட்டில் ஆப்பிர்க்காவில் அமெரிக்கா சர்வ ஜாக்கிரதையாகத்தான் இருப்பதாகக் கருதுகிறேன் (இதைப் பற்றி சொற்பமாகப் படித்த வரையில்). சொமாலியா மற்றும் சூடான் தவிர்த்து மிகப் பெரியப் பிரச்சினை இதுவரை இல்லை. எகிப்து அமெரிக்காவின் செல்லப் பிள்ளை.

லிபியா, சதாமுக்கு நடந்த மண்டகப்படியில் அரண்டுப் போய் கிடக்கிறது. மற்ற ஆப்பிரிக்க மக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளிலும் தங்கள் இனத்திலேயே அடைந்துக் கிடப்பதாலும், அமெரிக்காவைப் பற்றி கவலைக் கொள்ளவில்லை.

3. லெபனான், பாலஸ்தீனம்: சுதந்திரம், விடுதலை போன்றவை ஹெஸ்பொல்லா, ஹமாஸ் என்று மொழியாக்கப்பட்ட நிலையை அமெரிக்கா தோற்றுவித்திருக்கிறது. நல்லதா/கெட்டதா? அடுத்து எங்கே ராஜா கவிழ்ந்து மக்கள் ராச்சியம் உதிக்கும்? உதிக்க வேண்டுமா?

அரசியல் ஆழிப்பேரலை: மணி மு. மணிவண்ணன்

  • பொருளாதார வீழ்ச்சி.
  • பெட்ரோல் விலை எகிறல்.
  • ஜெனரல் மோட்டார்ஸ் தடுமாற்றம்.
  • அமெரிக்காவின் எதிரிகளின் ஏற்றம்.
  • மத்திய கிழக்கில் அமெரிக்கப் படையினரின் வலுவின்மை.
  • வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மை.
  • அமெரிக்க அதிபரின் மீது ஏமாற்றம்.

இத்தனையும் இருந்தும் தேர்தல் நாள்வரை ஆளுங்கட்சியின் வேட்பாளர் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சியின் வேட்பாளர் மக்களின் முழுநம்பிக்கையைப் பெறவில்லை.

இது மெக்கேன் ஒபாமா போட்டியைப் பற்றிய செய்தியல்ல.

28 ஆண்டுகளுக்கு முன்னர், 1980இல் அதிபர் கார்ட்டர் – ஆளுநர் ரேகன் போட்டியின் கடைசிவாரச் செய்தி.
“நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட இப்போது நல்ல நிலையில் இருக்கிறீர்களா? நல்ல நிலையில் இருக்கிறீர்கள் என்றால் ஆளுங்கட்சிக்கு வாக்களியுங்கள். இல்லை என்றால் எனக்கு வாய்ப்பளியுங்கள்.” இது குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோனால்டு ரேகனின் அறைகூவல்.

எதிர்க்கட்சி வேட்பாளர் உலக அரசியல் அனுபவமில்லாதவர். அவரைத் தேர்ந்தெடுத்தால், அணுவாயுதங்கள் வெடிக்கும் மூன்றாம் உலகப் போருக்கு ஆயத்தமாகுங்கள். இது ஆளுங்கட்சியான மக்களாட்சிக் கட்சியினரின் மிரட்டல்.

தேர்தல் நாளான நவம்பர் முதல் செவ்வாய்க்கு மூன்று நாள் முன்னர் வரை மக்கள் வேண்டா வெறுப்புடன் அதிபர் கார்ட்டரைத்தான் ஆதரித்தார்கள். ஈரானில் சிக்கியிருந்த அமெரிக்கப் பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் கார்ட்டரின் தோல்வி, 23% அடமான வட்டி வீதம், வேலையில்லாத் திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம், பெட்ரோல் சிக்கனப் படுத்தும் சின்ன கார் உற்பத்தியில் அமெரிக்க நிறுவனங்களின் தடுமாற்றம் இவை எல்லாவற்றையும் விட மூன்றாம் உலகப் போரை முடுக்கி விடுவதைப் போல சோவியத் யூனியனை மிரட்டிக் கொண்டிருந்த ரோனால்டு ரேகனைத் தேர்ந்தெடுக்க பயமாகத்தான் இருந்தது. ஆனாலும், அவர் போர் வெறியை விட அமெரிக்காவின் ஏற்றத்தைப் பற்றிய அவரது நம்பிக்கையும், உறுதியும் மக்களை ஈர்த்தது.

தேர்தலுக்கு முந்திய மூன்று நாட்களில் ஓர் அரசியல் பேரலை எழும்பியது. அந்த அலையின் தாக்கத்தில்தான் அரசாங்கம் என்பது மக்களின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை என்ற கொள்கை அமெரிக்க அரசியலின் தாரக மந்திரமாயிற்று. தனி மனிதர்கள், அவர்களது நிறுவனங்கள், அவர்கள் பொருளாதாரச் சந்தை, இவை அரசாங்கத்தின் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கப் பட்டால் மாபெரும் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற ஏயின் ரேண்ட் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அப்படி வந்தவர்களில் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேனும் ஒருவர்.

1929இல் பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்குப் பின்னர் அரசாங்கம் கொண்டு வந்த எல்லாக் கட்டுக்கோப்புகளையும் உடைத்தெறியும் முயற்சியில் இவர்கள் ஈடு பட்டனர். அரசு விதிக்கும் வரி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை போகும் முதலீட்டைப் பறித்து சோம்பேறிகள் சுகமாக வாழ வழிவகுக்கும் போதைப் பொருள் என்பது இவர்கள் வாதம். ஏழ்மைக்குக் காரணம் சோம்பல் என்பது இவர்கள் கூற்று. எதிரி நாட்டுகளைக் கட்டுப் படுத்தவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவவும் மட்டுமே அரசாங்கம் தேவை என்ற பொருளாதார அடிப்படை வாதம் இவர்கள் அடிநாதம்.

1932-ல் அதிபர் பிராங்க்ளின் டெலினோ ரூசவெல்ட் உருவாக்கிய முற்போக்குக் கூட்டணியை உடைத்தெறிய இவர்கள் அதிபர் நிக்சன் தந்திரங்களைப் பயன்படுத்திப் பிற்போக்குச் சக்திகளைத் திரட்டி மாபெரும் கூட்டணி ஒன்றை அமைத்தார்கள்.

  • மதவாதப் பிற்போக்கு சக்திகள்,
  • இனவாதப் பிற்போக்கு சக்திகள்,
  • பொருளாதாரப் பிற்போக்கு சக்திகள்

இவை அனைத்தும் ஒரே கூடாரத்தில் ரேகன் தலைமையில் கூடின. ரூசவெல்ட் தலைமையில் உருவான முற்போக்கு அரசு அமைப்புகள் மக்களின் வரிப்பணத்தை அட்டை போல் உறிஞ்சிக் கொண்டு ஊழலில் ஊறியிருந்தது இவர்களுக்குச் சாதகமாக இருந்தது.

உழைப்பவர்களுக்கு வரி, சோம்பேறிகளுக்கு அரசு சலுகையா? என்ற இவர்கள் அறைகூவல் வரிகளை நம்பியிருந்த அரசாங்கத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்தது. “வரி விதி, செலவு செய்” என்பதுதான் மக்களாட்சிக் கட்சியின் கொள்கை என்று இவர்கள் கட்டிய பட்டம் இன்று வரை மக்களாட்சிக் கட்சியை மிரள வைத்துக் கொண்டிருக்கிறது. 1992-ல் அதிபரான பில் கிளின்டனும் கூட இந்தப் பேரலையின் தாக்கத்தை எதிர் கொள்ள முடியாமல் இவர்களோடு ஒட்டி உறவாடிக் கொண்டே முற்போக்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

ரேகனின் பேரலையை வானளாவ உயர்த்தும் முயற்சியில் எழுந்தவர்தாம் இன்றைய அதிபர் ஜோர்ஜ் டப்யா புஷ். ரேகனைப் போன்ற பேரலையில் ஆட்சிக்கு வராமல், தட்டுத் தடுமாறி ஆட்சிக்கு வந்தாலும் தன்னை ரேகனின் மறு அவதாரமாகக் கருதிக் கொண்டவர் டப்யா புஷ். ரேகனைப் போலவே அரசு அமைப்புகளைச் சற்றும் நம்பாதவர் இவர். வாஷிங்டன் மக்கள் வரிப்பணத்தில் வாழும் அட்டைகள் நிரம்பிய குட்டை என்பது இவர் கொள்கை.

ரேகன் கொள்கைகளின் அடித்தளமே ஆடத் தொடங்கியது இவரது ஆட்சியில்தான்.

“கடன் வாங்கு, செலவு செய்” என்ற இவரது பொறுப்பற்ற கொள்கையின் விளைவுகளப் பார்க்கும்போது “வரி விதி, செலவு செய்” என்பது மிகவும் பொறுப்பான செயல் என்றே தோன்றுகிறது. மக்கள் வங்கிக்கணக்குகளைப் பாதுகாக்கத் தனியார் நிதி நிறுவனங்களின் மீது ரூசவெல்ட் ஆட்சி விதித்திருந்த கட்டுப் பாடுகளை வெகுவாகத் தளர்த்தியதில் முன்னணியில் இருந்தவர்கள் டப்யா புஷ், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கேன், மற்றும் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேன்.

என்னென்ன காரணங்களால் 1929 பங்குச் சந்தை வீழ்ச்சி பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்கு வழி வகுத்ததோ அதே காரணங்கள் மீண்டும் மேலெழுவதைப் பற்றிக் கவலைப் படாமல் கிளிப்பிள்ளை போல் அரசுக் கட்டுப்பாடுகள் தளர்ச்சி, செல்வந்தர்கள் வரி குறைப்பு என்ற மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தவர்கள் இவர்கள். இதில் உண்மையிலேயே பொருளாதார நிபுணரான ஆலன் கிரீன்ஸ்பான் அண்மையில் தனது கொள்கைகளால் அமெரிக்க, மற்றும் உலகப் பொருளாதார அமைப்புகள் அனைத்துமே நொறுங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதை உணர்ந்து, தன் கொள்கைகள் இந்த வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதை உணராமல் போய் விட்டதைப் பற்றி வருத்தம் தெரிவித்தார்.

ஆனால், டப்யா புஷ்ஷோ, ஜான் மெக்கேனோ இதைப் பற்றிப் புரிந்து கொண்டிருப்பதாகவோ, வருந்துவதாகவோ தெரியவில்லை. ஒபாமாவைப் பற்றிய மெக்கேனின் குற்றச்சாட்டு என்ன – “ஒபாமாவின் கொள்கை ‘வரி விதி, செலவு செய்’ – ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் வரி கூடும்” என்பதே. புஷ் – மெக்கேனின் ‘கடன் வாங்கு, செலவு செய்’ கொள்கையால் மக்களின் 401(k) ஓய்வுநிதிக் கணக்குகள் பேரிழப்புக்கு ஆளாகிக் கொண்டிருப்பதைப் பற்றி இவர்கள் வாயைத் திறக்க மாட்டார்கள்.

செப்டம்பர் 11 தாக்குதல் இவர்கள் கண்காணிப்பில்தான் நடந்தது. நியூ ஆர்லியன்ஸ் நகர் இவர்கள் ஆட்சியின் கீழ்தான் மூழ்கியது. ஓசாமா பின் லாடனின் முடியைத் தொடக்கூட இவர்கள் வக்கற்றவர்கள். ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களிலும் இவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஆட்சியின் கீழ்தான் பங்குச் சந்தையின் பெரு வீழ்ச்சியும், பொருளாதாரப் பெருவீழ்ச்சியும் தொடங்கியுள்ளன. இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் அரசாங்கக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவதற்குப் பதிலாக அரசாங்கத்தையே தளர்த்தும் மனப்பான்மை.

இதை மாற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் எத்தைகைய மாற்றம்? மெக்கேனுக்கும், டப்யாவுக்கும் அரசாங்கத்தைப் பற்றிய கொள்கைகளில் வேறுபாடு இல்லை. கடன் வாங்கிச் செலவு செய்யும் கொள்கையிலும் வேறுபாடு இல்லை. புஷ்ஷுக்குப் பதிலாக மெக்கேன் வந்தால் மட்டும் பெரிதாக என்ன மாற்றம் இருக்க முடியும்?

ஆனால், மக்களாட்சிக் கட்சியின் கொண்டு வரும் மாற்றம் என்ன?

அதற்கு எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்ப்போம்.

1989-ல் டப்யா புஷ்ஷின் தந்தை ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் ஆட்சியின் கீழ் சான் ஃபிரான்சிஸ்கோ நகரம் நிலநடுக்கத்தால் விளைந்த சேதங்களால் திணறியது. முக்கியமான பல மேம்பாலங்கள் சுக்கு நூறாகின. அவற்றை மீண்டும் கட்டி முடிக்கப் பல ஆண்டுகளாகின. நகரத்தின் வளர்ச்சி மட்டுப் பட்டது. பின்னர் 1992-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகரம் இனக் கலவரத்தால் பற்றி எரிந்தது. நாட்டின் அதிபர் புஷ்ஷும் சரி, கலிஃபோர்னியா மாநில ஆளுநர் வில்சனும் சரி நகரத்தைக் காப்பாற்ற முன் வரவில்லை. லாஸ் ஏஞ்சலஸ் நாதியற்றுத் தவித்தது.

1994-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்குள்ளே நார்த்ரிட்ஜில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தால் மிகுந்த சேதம் அடைந்தது. நிலநடுக்கத்தின் சேதம் தெரிந்த சில மணி நேரத்துக்குள் அதிபர் பில் கிளின்டன் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் மீட்சித் திட்டத்துக்கு வழி வகுத்தார். அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் இவர்கள் அனைவரும் நிலநடுக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்போதும் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு விரைந்து மீட்சிப் பணிகளைத் தொடங்கினார்கள். சில மாதங்களுக்குள் நகரத்தின் உடைந்த மேம்பாலங்கள் மீண்டும் கட்டப் பட்டன. பெருவீதிகள் சீரமைக்கப் பட்டன. நில நடுக்கத்தின் அடையாளமே தெரியாத அளவுக்கு நகரமும் புத்துணர்ச்சி பெற்று வளரத் தொடங்கியது. நல்ல அரசாட்சி என்பதற்கு இலக்கணம் வகுத்தார் பில் கிளின்டன். அவரது ஆட்சியின் கீழ் அமெரிக்கப் பொருளாதாரம் பெரு வளர்ச்சி நிலையை எட்டியது. ஏனென்றால், அரசாங்கத்தின் தேவையை முற்றும் உணர்ந்தவர் அவர்.

2008 தேர்தலின் முக்கியக் கொள்கைப் போராட்டம் இதுதான். அரசாங்கத்தின் தன்மை என்ன? அதன் தேவை என்ன?

குடியரசுக் கட்சிக்காரர்கள், அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்கள் அரசியல் எதிரிகளைப் பழி தீர்த்துக் கொள்வார்கள். தங்கள் மத நம்பிக்கைகளை மேம்படுத்துவார்கள். ஊழல் செய்யும் பெரு நிறுவனங்களைச் செல்லமாகத் தட்டி அனுப்பி விடுவார்கள். ஆனால், வெளிநாட்டுக் கொள்கைகளிலும், பொருளாதாரக் கொள்கைகளிலும் கெட்டிக்காரர்கள் என்று எடுத்த பெயரைக் கெடுத்துக் கொண்டுவிட்டார்கள்.

மக்களாட்சிக் கட்சிக்காரர்கள், மக்களின் தனி வாழ்க்கையில் அரசாங்கம் குறுக்கிடுவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் வசதியுள்ளவர்கள் மீது வரி விதித்து வசதியற்றவர்களுக்கு வாழ்வு கொடுப்பது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமை என்று நம்புபவர்கள்.

பொருளாதார வீழ்ச்சி சமயத்தில் இவர்கள் இருவரில் எவர் கொள்கை மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்?

1980-ல் கார்ட்டர் காட்டிய பூச்சாண்டிகளையும் மீறி மக்கள் ரேகனை வாக்குப் பேரலை மூலம் தேர்ந்தெடுத்தார்கள். 2008-ல் ரேகன் பேரலை வடியும்போது மெக்கேன் காட்டும் பூச்சாண்டிகளையும் மீறி ஒபாமா பேரலை எழுந்து கொண்டிருப்பது புலப்படுகிறது.

அமெரிக்க வரலாற்றிலேயே முக்கியமான தேர்தல் இது என்று பலர் கருதுகிறார்கள். ஆனால், அமெரிக்க வரலாற்றிலேயே மிக முக்கியமான தேர்தல் எட்டாண்டுகளுக்கு முன்னர் நடந்தது. புதிய ஆயிரத்தாண்டு தொடங்கும்போது தேர்ந்தெடுக்கப் பட்ட ஜார்ஜ் டப்யா புஷ்ஷின் திறமையின்மை அமெரிக்க வல்லரசின் சறுக்கலுக்கு வித்திட்டு விட்டது. கடந்த எட்டாண்டுகளில் அவர் செய்தவற்றின் பின் விளைவுகளில் இருந்து மீளப் பெரு முயற்சி தேவைப்படும்.

ஒபாமா அதிபராகத் தேர்தெடுக்கப் பட்டால் குறைந்தது அமெரிக்கச் சறுக்கல் நிதானப் படலாம். புஷ்ஷின் கொடுங்கோலாட்சியின் கடுமையான விளைவுகளால் வாடும் அமெரிக்கா மட்டுமல்ல உலகமே ஒபாமாவின் வெற்றியை வரவேற்கும்.

மணி மு. மணிவண்ணன், சென்னை, இந்தியா.

துக்கடா: கருத்து – குசும்பு – கும்மாங்குத்து

W & McCain

‘கரிசல்’ சன்னாசியின் ஜார்ஜ் W. புஷ் வாழ்க்கைப்படம் குறித்த திரை விமர்சனம்: டபிள்யூ

கருத்துப் படம்:

கொசுறு படம்:

சொ. சங்கரபாண்டி – இந்த வார சிறப்பு விருந்தினர்

1. ஒபாமாவா? மெகெயினா? இரண்டும் பேரும் சரியில்லை என்று தப்பிக்கக்கூடாது. இருப்பதற்குள் எவர் ஒகே? ஏன்?

சந்தேகமேயில்லாமல் ஓபாமாதான். பல காரணங்கள் உண்டு, எனக்கு மிக முக்கியமாகப் பட்ட இரண்டு மட்டும் இங்கே (பெருவாரியான அமெரிக்க மக்கள் வாக்களிப்பதற்கு இவை அடிப்படையாக இருக்காது என்றும் கருதுகிறேன்) :

(அ) அமெரிக்காவின் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப் படவேண்டும் அல்லது யார் தேர்ந்தெடுக்கப் படக் கூடாது என்பதில் அமெரிக்க நலன் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த உலக நலனும் அடங்கியிருக்கிறது.

சோவியத் யூனியன் இருந்தவரை இரு வல்லரசுகளிடையேயிருந்த போட்டியில் இரண்டு நாடுகளும் ஓரளவுக்காவது தங்கள் ஏகாதிபத்தியச் சண்டித்தனத்தை எச்சரிக்கையுடன் கையாண்டன. அதனால்தான் ரீகன் தலைமையிலான அமெரிக்க முதலாளித்துவ ஆதிக்கவெறியர்கள் சோவியத் யூனியனை எப்படியாவது உடைத்தெறிவதில் முழுமுனைப்பாக இருந்து வெற்றியும் கண்டனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கை மட்டுப்படுத்துவதில் எந்த பெரிய நாடும் அமெரிக்காவுடன் மோதிக் கொண்டதில்லை.

பொதுவுடைமைப் போலியான சீனா போன்ற நாடுகள் தங்களுடைய குறுகிய தேச நலனுக்காக எல்லாவிதச் சமரசங்களைச் செய்து கொள்வது மட்டுமல்லாமல், தம்மளவில் புதிய மக்கள் விரோதச் சண்டிநாடுகளாகத்தான் இருந்து வருகின்றன. எனவே அமெரிக்காவின் தலைவராக வருபவர் உலக ஒற்றுமைக்கும், அமைதிக்கும் முனையாவிட்டாலும் (எ.கா: ஜிம்மி கார்ட்டர் முயற்சி செய்தார்) பரவாயில்லை, சுயநலத்தின் உந்துதலால் உலக அமைதியைச் சிதைப்பவராக இல்லாமல் இருப்பதே பெரிது (எ.கா: புஷ்-சேனி கும்பல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது).

அமெரிக்காவில் உள்நாட்டில் எத்தனையோ பொருளாதார மற்றும் சமூகப் பிரச்னைகளுள்ளன. அவற்றின் மேல் முதலில் அக்கறை செலுத்துபவராகவும் இருந்தால், உலகத்தைச் சீர்குலைப்பதில் குறைவான கவனம் செலுத்தக் கூடும் (எ.கா: பில் கிளிண்டன்).

மேலும் அமெரிக்க அரசிடம் ஏகோபித்த செல்வாக்கு செலுத்தி வரும் இஸ்ரேலிய ஆதாயக் கூட்டத்தின் முழுமையான கைப்பாவையாகச் செயல்படக்கூடியவராக (எ.கா. மெக்கெய்ன் – பேலின்) இல்லாமல் இருக்க வேண்டும்.

உலகெங்கும் இசுலாமிய அடிப்படைப் பயங்கரவாதம் உருவாக முக்கியமானதொரு காரணம் அமெரிக்க அரசை ஆட்டிப்படைக்கும் இஸ்ரேலிய ஆதரவுக் கும்பல்தான். விளைவு பயங்கரவாதத்தை ஒடுக்குகிறேன் என்ற போர்வையில் பல நாடுகளில் தற்பொழுது அரசு பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது.

மெக்கெய்னுக்கும், பேலினுக்கும் இஸ்ரேல் மட்டும்தான் செல்ல நாடுகள் என்பது அவர்களுடைய வாதங்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. எனவே அவர்கள் வந்தால் நிலைமை மோசமாகவே வாய்ப்பிருக்கிறது. மெக்கெய்ன்- பேலின் தேர்ந்தெடுக்கப் பட்டால் போரும், இராணுவமும் பூதாகரமான வளர்ந்து எல்லா நாடுகளிலும் மக்களை வறுமை, வேலையிழப்பு, பட்டினி என இட்டுச் செல்லும் வாய்ப்பு அதிகம்.

(ஆ) கடந்த தலைவர் தேர்தலுக்குப் பின் உருவான ஓபாமா என்ற புதிய நட்சத்திரத்தை(அல்லது பிம்பத்தை)ப் பற்றி நண்பர்கள் பேசியபொழுதெல்லாம் நான் ஓபாமாவைப் பற்றிய நல்லதொரு அபிப்ராயத்தைக் கொண்டிருக்கவில்லை. ஒபாமவை தமிழரங்கம் சொல்லியதுபோல் ”பாரக் ஒபாமா: அமெரிக்காவின் மாயாவதி“யாகத்தான் அல்லது சன்னாசி-சுந்தரமூர்த்தி-செல்வராஜ் போன்ற நண்பர்களின் கருத்துப்படி சரக்கில்லா வெறும் பிம்பமாகத்தான் எண்ணிக் கொண்டிருந்தேன். இன்னமும் அவர்கள் எழுப்பிய ஐயங்கள் பொய்யாகத்தோன்றவில்லை. சன்னாசியின் இந்த இடுகையுடன் எனக்கு உடன்பாடில்லை என்றும் சொல்லி வைக்கிறேன். ஆனால், ஓபாமாவின் இனங்களுக்கிடையேயான சிக்கல்களைப் பற்றிய பேச்சில் தெரிந்த யதார்த்தமும், நேர்மையும் அவரைப் பற்றிய நம்பிக்கையைக் கூட்டியிருக்கிறது.

தலைமையும், வழிகாட்டலுமில்லாமல் வெள்ளை மேட்டுக்குடியினரிடம் பல துறைகளில் போட்டியிட இயலாத கருப்பினத்து மக்களிடையே தன்னம்பிக்கையுடன் சில மாற்றங்களைக் கொண்டுவர ஓபாமாவின் தேர்வு மிகப் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.

மிக எளிமைப் படுத்திச் சொல்வதாயிருந்தால், இராஜாஜியையும், சிதம்பரத்தையும் விட கல்வியறிவிலும், மேதாவித்தனத்திலும் பின்தங்கியிருந்தாலும், கருணாநிதியும், மாயாவதியும் ஆட்சிக்கு வந்தபின்னால் பிற்படுத்தப் பட்ட மற்றும் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு ஏற்பட்ட தன்னம்பிக்கை மிக முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.

மூதறிஞர் என்று சொல்லப் பட்ட இராஜாஜி சாதித்ததை விட கல்வியறிவும், அனுபவமுமில்லாத எம்.ஜி.ஆர் சாதித்தது எவ்வளவோ மேல்.

மற்றபடி மருத்துவ நலம், கல்விக்கட்டணங்கள், வேலை வாய்ப்பு என எத்தனையோ உள்நாட்டு விசயங்களில் பெரிய மாற்றங்களையெல்லாம் கொண்டுவரக்கூடிய சூழ்னிலையில் அமெரிக்கப் பொருளாதாரம் இன்றைக்கில்லை. எனவே யார் வந்தாலும் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை.

2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது?

அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் தமிழக ஜனநாயகம் எவ்வளவோ தேவலாம் – மூஸ் ஹன்ட்டர்

5. தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா? வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை? எவ்வாறு வேறுபடுகிறது?

இந்த கேள்வி விலாவரியாக விவாதிக்கத் தகுந்தது. கோர்வையாக என்னால் பதிலளிக்க முடியுமா என்று தெரியவில்லை.

முதலில், தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா என்று தெரியவில்லை. வேண்டுமானால் பொதுவாக இந்திய, அமெரிக்க அரசு, அதிகார முறைகள், தேர்தல்கள், அவற்றையொட்டிய பிரச்சார முறைகள் போன்றவற்றை வேண்டுமானால் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

முதலில் இந்தியாவில் தேர்தல் என்பது ஒரு திருவிழா போன்றது. பொதுமக்களின் ஆர்வமும், பங்கேற்பும் அதிக அளவில் இருக்கும்.

இங்கு அப்படி வெளிப்படையாகத் தெரிவதில்லை. வாக்களிப்பு சதவீதமே மிகக்குறைவு.

இந்தியாவிலும் நடுத்தரவர்க்கத்தினர் அதிகமாக வாக்களிப்பதில்லை என்று கூறப்படுவதுண்டு. இங்கு ஏழைவர்க்கத்தினர் தான் அதிக அளவில் வாக்களிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது.

வாக்கு வங்கி அரசியல் இங்கும் இருப்பதாகவே நினைக்கிறேன். நம் ஊரில் மதம், ஜாதி என்றால், இங்கு இனம், மதம் வாக்கு வங்கி அரசியலுக்கு அடிப்படையாக உள்ளன. ஒரே வித்தியாசம் பலகட்சி ஜனநாயகமான இந்தியாவில்/தமிழ் நாட்டில் இந்த குழுக்கள் ஏதாவது ஒரு சிறுகட்சியையாவது முன்னிறுத்தி செயல்படுவதால் இப்போதெல்லாம் பல கட்சிகளைச் சேர்த்து கூட்டணி அமைத்து இத்தகைய வாக்கு வங்கிகளைக் கவர முயற்சிக்கிறார்கள்.

இந்நாட்டில் இரு கட்சி ஜனநாயகம் செயல்படுவதால் அந்த குழுக்களின் அரசியல் சாரத அமைப்புகளை கவர வேண்டியுள்ளது. அக்குழுக்கள் நடத்தும் கூட்டங்களுக்கு இரு தரப்பு வேட்பாளர்களும் அழைக்கப்படுகிறார்கள். ஆனாலும், நம் ஊரில் மதங்கள், ஜாதிகள் வெளிப்படையாக கட்சிகள் அமைத்து செயல்பட்டாலும், அவை தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதாக நான் நினைக்கவில்லை.

பெரிய கட்சிகள், அவற்றின் தலைவர்கள் மீதிருக்கும் அபிமானம் பெருமளவும், அப்போதைய பொதுப் பிரச்சினைகள் ஓரளவும் தான் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன என்பது என் கருத்து. ஜாதி, மதக் குழுக்கள் ஒட்டு மொத்தமாக ஒரு பக்கம் சாய்ந்து முடிவுகளை மாற்றுவதில்லை.

ஓரிரு ஜாதிகள் வேண்டுமானால் அரசியல் ரீதியில் வெற்றிகரமாக ஒன்று திரண்டிருக்கலாம். அதற்குக் காரணம் அந்த ஜாதிகளில் தோன்றிய நம்பிக்கைக்குரிய தலைவர்கள் மட்டுமே காரணம். இங்கும் வேட்பாளர்கள் ஒவ்வொரு மக்கள் குழுவுக்கும் தகுந்த மாதிரி பேச வேண்டியுள்ளது.

இனம் என்று எடுத்துக்கொண்டால் யூதர்கள், ஹிஸ்பானிக்குகள், கறுப்பர்கள் போன்ற இனக்குழுக்கள் ஏதாவது ஒரு கட்சியை அல்லது வேட்பாளரை பெரும்பான்மையாக ஆதரிக்கும் நிலை உருவாகிறது.

பொதுவாக கறுப்பர்கள் ஜனநாயகக் கட்சியை அதிகமாக ஆதரிக்கிறார்கள். கடந்த தேர்தல்களில் ஹிஸ்பானிக்குகள் பெரும்பான்மை ஜார்ஜ் புஷ்ஷை ஆதரித்தனர். இந்த தேர்தலில் இன்னும் உறுதியாக தெரியவில்லை என்றாலும், ஒபாமா பக்கம் சாய்வதாகத் தெரிகிறது. உதாரணமாக கொலராடோவில் ஹிஸ்பானிக்குகளின் ஆதரவு தேர்தலை முடிவு செய்யும் என்று கருதப்படுகிறது.

அடுத்து பணம். நம் ஊரில் தேர்தலின்போது கருப்புப்பணம் புகுந்து விளையாடும். சொல்லப்போனால் கருப்புப்பணம் வெளியே வர, செல்வம் மறுவிநியோகம் செய்யப்பட தேர்தல் ஒரு முக்கிய காரணியாக செயல்படுகிறது. தேர்தல் பணம் பலத்தரப்பட்ட மக்களை வெவ்வேறு வகையில் சென்றடைகிறது.

இந்த நாட்டில் தேர்தலில் சொந்த பணத்தை செலவிடுவது மிகமிகக் குறைவு. தனிநபர், தனியார் நிறுவனங்களின் பங்களிப்புகள், அரசு நிதி ஆகியவையே தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவியாக இருக்கின்றன. ஆனால் இந்த நாட்டிலிருக்கும் தேர்தல் பிரச்சார முறைகள் காரணமாக செலவிடப்படும் பணம் பெரும்பாலும் தொலைகாட்சி, வானொலி போன்ற பெரிய விளம்பர நிறுவனங்களுக்கே போகிறது.

வாக்களிக்கும் முறைகளில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதாக நினைக்கிறேன். இந்தியாவில் இருப்பது போன்று சீரான வாக்களிக்கும் முறை இங்கு இல்லை.

2000 ஆம் ஆண்டு தேர்தலின்போது தான் இங்குள்ள வாக்களிக்கும் முறையில் உள்ள குழப்பங்கள் தெரிய ஆரம்பித்தன. தேர்தலை நடத்துவது, அது நாட்டின் அதிபர் தேர்தலாக இருந்தாலும், பொறுப்பு மாநில அரசைச் சார்ந்தது. ஆகையால் மாநிலத்துக்கும் மாநிலம் வாக்களிக்கும் முறை வேறுபடுகிறது.

இந்தியாவை ஒப்பிடும்போது இங்கு பெரும்பாலான மாநிலங்கள் இதில் பின்தங்கியிருப்பதாகவே நினைக்கிறேன். தேர்தலை நடத்தத் தேவையான அளவு பணம் ஒதுக்குவதில் பல மாநிலங்கள் அக்கறைக் காட்டுவதில்லை என்று தெரிகிறது.

வாக்களிப்பது, வாக்கு எண்ணிக்கை போன்றவற்றில் மாநில அரசுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளின் குறுக்கீடுகள் இருப்பதாகத் தெரிகிறது. 2000 ஆண்டு தேர்தலின்போது ஃப்ளோரிடாவில் மாநிலத் தலைமைச் செயலாளர் கேதரின் ஹாரிஸ் (இவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்; புஷ்ஷின் தேர்தல் பிரச்சார அதிகாரியாகவும் இருந்தவர்) செய்த தில்லுமுல்லுகள் பிரசித்தமானவை.

வாக்காளர்களை மிரட்டுதல், வாக்களிக்கவிடாமல் தடுத்தல் போன்ற பல தில்லுமுல்லுகள் வெளிச்சத்துக்கு வந்தன. இந்த தேர்தலிலும் அதுபோன்று பெருமளவு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (உ-ம்: http://www.npr.org/templates/story/story.php?storyId=95509946).

இதில் ஆளும்கட்சியின் தலையீடு எந்த அளவுக்குப் செல்கிறது என்பதை முன்னாள் அரசுத் தலைமை வழக்கறிஞர் அல்பர்டோ கன்சாலஸ் அவர்களால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு அரசு வழக்கறிஞரின் செவ்வியைக் கேட்டபோது வாயடைத்துப்போனேன்.

அமெரிக்க ஜனநாயகத்தின் லட்சணம் இவ்வளவு தானா என்று.

அமெரிக்க அதிபரின் தலையாய கடமை

அமெரிக்காவில்:

  • எவருக்கு வாக்களிக்க உரிமை இருக்கிறது (ஆண்கள், பெண்கள், கறுப்பர், குடிபுகுந்தோர், குற்றம் புரிந்தோர் போன்ற பிரிவுகளில்) என்று யார் அறிவுறுத்துகிறார்கள்?
  • எது சுதந்திரம் (துப்பாக்கி வைத்துக் கொள்ளுதல், கருவைத் தக்க வைத்துக் கொள்ளுதல் அல்லது சுயமாக நிர்ணயம் செய்வது போன்ற பிரச்சினைகளில்) என்று எவர் முடிவெடுக்கிறார்கள்?
  • சமூக நீதியை (சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு, ஆண்/பெண் ஏற்றத்தாழ்வு, வந்தேறிகளுக்கும் குடிமகன்களுக்கும் இடையே வித்தியாசங்களை) பரிபாலிப்பவர் யார்?
  • இன்ன பிற (சுற்றுச்சூழல் மாசு, புகை பிடித்தல், நோய்க்கான மருந்து போன்றவற்றில் நிறுவனங்களுக்கும் அரசாங்கத்துக்கும் தனிமனிதனுக்கும் இடையே உள்ள பொறுப்பை) தீர்மானிப்பது எங்கே?

எல்லாக் கேள்விக்கும் விடை: அமெரிக்க உச்சநீதிமன்றம்

இதில் ஒன்பது நீதிபதிகள் அமர்ந்து முடிவெடுக்கிறார்கள். 88 வயதான ஜான் பால் ஸ்டீவன்ஸ் கூடிய சீக்கிரமே ஓய்வெடுப்பார் என்று நம்பப்படுகிறது. அவரின் இடத்தை நிரப்புவது அடுத்த அதிபரின் மிக முக்கிய கடமை.

புஷ் அதிபராக இருந்தபோது இரண்டு பாரம்பரிய (பழமைவாத) நீதிபதிகளை மெகயினின் அருந்துணையோடு அமர்த்தினார்.

மெகயின் அதிபரானால் கலாச்சார காவலர்களில் கை வலுப்படும். ஒபாமா வந்தால் தாராள சிந்தனை உள்ளவர் வருவார்.

இது இன்றைய நிலை:

மெகயின் அதிபரானால் என்னவாகும்? அலசல்: வால் ஸ்ட்ரீட் ஜர்னல் – Shifting Median: A McCain Supreme Court

ஒபாமா அதிபரானால்… ஆய்வு: Dissenting Opinions on the Supreme Court’s Future: See what an Obama Supreme Court might look like.

அமெரிக்க அதிபர் தேர்தல் சூழலும் வெற்றி பெறும் வித்தைகளும் – மூஸ் ஹன்டர்

3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது?

மெக்கெய்னுடைய ஒரேநிலைப்பாடு எப்பாடுபட்டாவது அதிபர் ஆவது. அவருக்கு இதுவே கடைசி வாய்ப்பு.

மெக்கெய்னைப் பற்றி அதிகமாக அறியாத காலத்தில், அதாவது 2000 ஆம் ஆண்டுத் தேர்தலின்போது, அவர் மீது நல்ல அபிப்ராயம் இருந்தது. இப்படிப்பட்ட ஒரு அனுபவமிக்க மிதவாதியைப் புறக்கணித்து கத்துக்குட்டித் தீவிரவாதி புஷ்ஷை தேர்ந்தெடுத்திருக்கிறார்களே என்று அவர் மீது பரிதாபம் கூட இருந்தது.

மெக்கெய்ன்-ஃபெய்ன்கோல்ட் தேர்தல் நிதி சட்டம், மெக்கெய்ன் – கென்னடி குடியேற்றச் சீர்த்திருத்த மசோதா போன்றவற்றில் அவர் பங்காற்றியபோது அவருடைய ‘மேவரிக்’ பிம்பம் மீது ஒரு கவர்ச்சி இருந்தது.

தேர்தல் மீது ஒரு கண்வைத்து கடந்த சில வருடங்களாக புஷ்ஷின் ஒவ்வொரு சொல்லையும், செயலையும் ஆதரிக்க ஆரம்பித்ததிலிருந்து தற்போது ஒபாமாவின் மீது சேறு வாரி இறைக்கும் தேர்தல் உத்திவரை மெக்கெயினின் நடவடிக்கையைப் பார்த்தால் அவர் மீது இருந்த மரியாதை முற்றிலுமாக மறைந்துவிட்டது.

அவருடைய நிலைப்பாடுகள் எதுவும் இப்போது நிலையானதாக தெரியவில்லை. அடிக்கடி மாறிக்கொண்டிருக்கிறது. இதற்கு நல்ல உதாரணம் குடியேற்ற சீர்த்திருத்தம்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் டெமாக்ரடிக் செனட்டர் எட்வர்ட் கென்னடியுடன் இணைந்து குடியேற்றச் சீர்த்திருத்தச் மசோதாவை அறிமுகப்படுத்தியவர் முதற்கட்ட வேட்பாளர் தேர்தலின்போது கன்சர்வேடிவ்களின் வாக்குகளை மனதில் வைத்து அதைப் பற்றி பேசவே மறுத்தார்.

பிறகு லத்தினோக்களின் வாக்குகளை மனதில் வைத்து குடியேற்றச் சீர்த்திருத்தத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார். பிறகு மீண்டும் மாற்றிக்கொண்டார். எப்படியாவது இந்த தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் பல விஷயங்களில் முன்னுக்குப் பிறகு முரணாக பேசிக்கொண்டிருக்கிறார்.

அவருடைய நிலைப்பாடு மாறாமலிருப்பது ராணுவவிஷயங்களில் மட்டுமே. எனக்கு இவ்விஷயங்களில் ஆர்வமில்லை.

4. இந்த இருவரும் இல்லாமல், இன்னொருவர் ஜனாதிபதியானால் சரியாக இருக்கும் என்று சொல்ல நினைத்தால் எவரை கைகாட்டுவீர்கள்? எதற்காக?

முதல் கேள்வியில் சொன்னமாதிரி ரால்ப் நேடரைச் சுட்டிக்காட்டலாம். பெரிய கட்சிகளில் இருந்து தான் வரவேண்டுமென்றால் ஜனநாயகக் கட்சியில் இருந்து ஹில்லரியும், குடியரசுக் கட்சியில் இருந்து மைக் ஹக்கபியையும் காட்டுவேன்.

முதற்கட்ட வேட்பாளர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக ஹில்லரியே வெற்றி பெற வேண்டுமென்று விரும்பினேன்.

என்னுடைய எதிர்பார்ப்பு ஹில்லரி அதிபராகவும், அவருடைய துணை அதிபராக நியூ மெக்சிகோ ஆளுநர் பில் ரிச்சர்ட்சனும் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் என்று இருந்தது. ஹில்லரி வேட்பாளராக தேர்வாகாதது ஏமாற்றமாக கூட இருந்தது.

காரணம் ஹில்லரி, ஒபாமா இருவரது அனுபவம், வயது வித்தியாசம்.

பல பிரச்சினைகளில் இருவரது நிலைப்பாடுகளும் ஒரே மாதிரியிருந்தாலும், இந்த வாய்ப்பை விட்டால் ஹில்லரிக்கு அல்லது அவர் போன்ற முற்போக்கு பெண்ணுக்கு இன்னொரு வாய்ப்பு அடுத்த சில தேர்தல்களில் கிடைப்பது அரிது. அவரது தோல்வியின் எதிரொலி இப்போதே தெரிந்துவிட்டது.

அவருக்கு மாற்றாக ஒரு பிற்போக்குப் பெண்மணி முன்னிருத்தப்படுகிறார். இது என்னைப் பொருத்தமட்டில் ஒரு பெண் அதிபராவதற்கு பின்னடைவைத் தான் ஏற்படுத்தும்.

ஒபாமா இளம்வயதுக்காரர். இன்னும் சில ஆண்டுகள் அரசியல் அனுபவம் பெற்று ஹில்லரிக்குப் பிறகு 2016 இல் இப்போதிருப்பதை விட இன்னும் தீவிரமாக, அனுபவ முதிர்ச்சியோடு களமிறங்கினால் நிச்சயமாக வெற்றி பெறுவார். இத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் அது முழுக்க அவரது வெற்றி என்று சொல்ல முடியாது.

ஜார்ஜ் புஷ்ஷின் எட்டாண்டு ஆட்சியின் மீதுள்ள அதிருப்தியும், தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளும் ஒபாமாவுக்கு பெருமளவு உதவியாக இருக்கப்போகிறது.

5. தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா? வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை? எவ்வாறு வேறுபடுகிறது?

மெகயின் ஜெயிப்பது துர்லபம்: ஏன்? (ஆராய்ச்சி)

கேள்வி:

அமெரிக்க அதிபர் தேர்தலில் நிக்ஸனோ, புஷ்ஷினரோ வேட்பாளராக இல்லாமல் குடியரசுக் கட்சியினர் கடைசியாக வென்றது எப்போது?

விடை: The Last U.S. Presidential Election the GOP Won Without a Nixon or a Bush on the Ticket

ஜார்ஜ் புஷ்ஷின் முன்னாள் பிரதம மந்திரி ஒபாமாவை ஆதரிக்கிறார்

அன்று:

நேற்று:

இன்று:

ஆசைப்பட்டதோ?

மேலும் விவரங்களுக்கு:

1. BBC NEWS | Americas | Colin Powell backs Barack Obama

2. Powell says he will vote for Obama – First Read – msnbc.com

“when I look at all of this… But which is the president that we need now… I come to the conclusion … because of who he is, he has both style and substance … I think he is a transformational figure… For that reason, I will be voting for Sen. Barack Obama.”

3. Colin Powell endorses Obama – CNN.com:

  • Ex-Secretary of State Colin Powell voting for Barack Obama
  • Powell makes announcement on ‘Meet the Press’ Sunday
  • Powell told CNN in February: ‘Keeping my options open’ on endorsing
  • The former general has said the next president will have to restore America’s image

அடுத்த அமெரிக்க அதிபருக்கு நிச்சயம் ஆப்பு – சத்யா

5. ஒபாமா 98% ஜனநாயகக் கட்சியின் கொறடா/வழிகாட்டலின் படி செனேட்டில் வாக்களித்திருக்கிறார். ஜான் மகயின் 90% புஷ்ஷோடு ஒத்துப் போய் இருக்கிறார். இவர்களுக்கு ‘மாற்றம்’ தாரக மந்திரத்தையும் ‘மேவ்ரிக்’ பட்டத்தையும் வைத்துக் கொள்ள என்ன தகுதி உள்ளது? Bipartisan என்று முழங்கினாலும் செய்கையில் அதை நிரூபிக்காதவர்களின் அடுத்த நான்கு வருடங்கள் புஷ்ஷோடு ஒப்பிட்டால் எவ்வாறு வேறுபடும்?

நூறு சதவிகிதம் ஒத்துக்கொள்கிறேன். இருவருக்கும் ஒரு பெரும் வித்தியாசம் இருப்பதாக தோன்றவில்லை பார்க்க ‘என் ஓட்டு’ கேள்வியில்.

அரசியலில் வாய்ப்பந்தல் போடுபது எல்லாமே ஓட்டுக்களை வாங்குவதற்கு மட்டுனே. அரசாங்கம் எனும் மாபெரும் இயந்திரத்தை ஒட்டுமொத்தமாக யாராலும் மாற்றிவிட முடியாது. அடுத்த நான்கு வருடங்களில் இரண்டு வருடங்கள் இருக்கும் பிரச்சனைகளை சரிசெய்யவே போய்விடும். இதில் பெரும் பணிகள் காத்து இருக்கின்றன. சரியான திட்டங்கள் தேவை.

அடுத்த ஜனாதிபதி என்ன செய்தாலும் ‘அப்பவே சொன்னேன் பாத்தீங்களான்னு’ அழ அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

ஒபாமா வந்தால் இன்னும் கட்டுப்பாடுகள் கொண்டு வருவார். வெளிநாட்டுக்கு போகும் வேலைகளை தடை பண்ண ஏதாவது சட்டம் கொண்டு வந்தாலும் வருவார். கொஞ்சம் பெரிய நிறுவனங்களுக்கு தலைவலியாக இருப்பார் என்று தோன்றுகிறது.

அவர் பேசுவதையெல்லாம் செய்ய அரசியலும் லாபிக்களும் தடைசெய்யும். அதனால் ஒரளவு கட்டுப்பாடுகளும் போர் முழக்கங்கள் இல்லாமலும் இருக்கும. ஈராக்கிலிருந்து ஓடிவருதெல்லாம் வேலைக்காகாது. கெட்ட பேரும் தலைவலியும் தான் மிஞ்சும்.

மகெயின் வந்தாலும் ஒபாமாவுக்கும் இவருக்கும் வித்தியாசம் இருக்காது. ஈராக் நிலைமையும் ஆப்கானிஸ்தானும் சீராக வேகமான சரியான முடிவெடுப்பார் என்றே தோன்றுகிறது.பொருளாதாரத்தை வேகமாக நிமிர்த்துவார் என்றே நம்பிக்கை அளிக்கிறார். கொஞ்சமாவது லாபிக்களை ஒழிப்பார்.

இவருடைய ஈரான் கொள்கைகள் கிலியை ஏற்படுத்துகின்றன. அனேகமாக நான்காவது வருட இறுதியில் புஷ் போலவே ஏதாவது வேடிக்கை காட்டுவார். பார்ப்போம்.

6. வேட்டி-சட்டை, குர்தா-பைஜாமா: ஒபாமா/மகயின் – எவருக்கு எது பொருத்தமாக இருக்கும்?

சத்யா